ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு மேலும் 3 மாதம் அவகாசம்
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா தொடர்ந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி திருச்சி அருகே, காலையில் நடைபயணம் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மனைவி லதா மனு
ராமஜெயம் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை கோரி அவரது மனைவி லதா, கடந்த 2014 டிசம்பரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை நீதிபதி ஏ.எம்.பசீர் அகமது முன் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
சிபிசிஐடி அறிக்கை
சிபிசிஐடி தரப்பில் தற்போதைய நிலை குறித்த 9வது ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மேலும் கால அவகாசம் வேண்டும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவகாசம் தர எதிர்ப்பு
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'கொலை நடந்து 4 ஆண்டுக்கு மேலாகிறது. மனு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. மனு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மேலும் கால அவகாசம் அளிக்க தேவையில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.
3 மாதம் அவகாசம்
சிபிஐ தரப்பில், எங்களது விசாரணைக்கு மாற்றினால், ஆரம்பத்திலிருந்து நாங்கள் விசாரிக்க வேண்டும். அதற்கு காலதாமதம் ஏற்படும். சிபிசிஐடி போலீசாரே விசாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, 2017 ஜனவரி 18க்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கியது.
முடிவுக்கு வருவது எப்போது
ராமஜெயம் கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளின் நிழலைக் கூட சிபிசிஐடி போலீசார் நெருங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமஜெயம் நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தாலும் கன்னித்தீவு கதையாக நீள்கிறது இந்த கொலை வழக்கு. 9 ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிலாவது குற்றவாளிகள் சிக்குவார்களா? ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மட்டுமே வெளிச்சம்.