For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி கொலை வழக்கு: சிபிசிஐடி பிடியில் ‘டாங்லீ’ கண்ணனின் கள்ளக்காதலி யமுனா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

CB-CID gets custody of woman arrested in double murder case
திருச்சி: கணவன், மகள், மகன் கொலை உள்பட, ஐந்து கொலைகளில் தொடர்புடைய சாமியார் கண்ணனின் கள்ளக்காதலி யமுனாவை, சி.பி.சி.ஐ.டி., போலீஸார், மூன்று நாள் கஸ்டடி எடுத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் கண்ணன் செய்துள்ளதாக சந்தேசப்படும் பல கொலைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சாமியார் கண்ணன் (வயது 42). இவர் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்த கள்ளக்காதலி யமுனாவின் கணவர் தங்கவேல், மகன் செல்வக்குமார் (வயது20), மகள் சத்யா (22) ஆகியோரை கொலை செய்து திருச்சி அருகே காட்டு பகுதியில் வீசினார்.

இதே போன்று யமுனா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோரையும் கொன்று வையம்பட்டி அருகே காருக்குள் வைத்து எரித்து விட்டார். இந்த 5 கொலைகள் குறித்து திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான போலீசார் சாமியார் கண்ணனிடம் 3 நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி கஸ்டட்டியில் யமுனா

துரைராஜ் கொலை வழக்கில் யமுனாவிற்கும் தொடர்பு இருப்பதாக கண்ணன் கூறியதை அடுத்து யமுனாவிடம் கொலைகள் குறித்து விசாரிக்க, ஏழு நாள் கஸ்டடி கேட்டு சி.பி.சி.ஐ.டி., போலீஸ் டி.எஸ்.பி., மலைச்சாமி, திருச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் திலீப், யமுனாவை, மூன்று நாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதித்தார்.

நேற்று மாலை, 4 மணிக்கு, யமுனாவை. திருச்சி, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணை முடிந்து, அவர் மீண்டும் ஆறாம் தேதி மாலை, 4 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கஸ்டடி எடுத்துள்ள யமுனாவிடம் விசாரித்தால், கண்ணன் பற்றிய மேலும் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் என, சி.பி.சி.ஐ.டி., போலீஸார் தெரிவித்தனர்.

கணவன் இடைஞ்சல்

கள்ளக்காதலி யமுனாவுடன் நெருங்கி பழகிய சாமியார் கண்ணனுக்கு அவரது கணவர் தங்கவேல் இடைஞ்சலாக இருந்துள்ளார்.

எனவே அவரை ‘கர்மா' கொடுக்க அழைத்துச் செல்கிறேன் என்று கூறி சமயபுரம் அருகே கொன்று புதைத்துள்ளார். இதனையடுத்து சாமியார் கண்ணன் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக போய்விட்டார் யமுனா.

துரைராஜ் கொலை

இந்த நிலையில் கணவர் தங்கவேலுவிற்கு ரூ.15 லட்சம் கடன் கொடுத்த கிராப்பட்டி ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் அடிக்கடி வீட்டிற்கு வந்து யமுனாவிடம் பணம் கேட்டுள்ளார். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியது சாமியார் கண்ணனுக்கு பிடிக்கவில்லை.

எனவே துரைராஜை தீர்த்து கட்டி விட்டால் யமுனா தனக்கு மட்டுமே சொந்தமாகி விடுவார். மேலும் ரூ.15 லட்சம் கடனிலிருந்து யமுனாவும் தப்பித்து விடலாம் என முடிவு செய்து துரைராஜையும், டிரைவர் சக்திவேலையும் கொலை செய்து எரித்து விட்டார்.

மறந்து போன கொலைகள்

12 வருடங்களுக்கு முன்பு நடந்த தங்கவேல் கொலையிலும் 7 வருடங்களுக்கு முன்பு நடந்த துரைராஜ் கொலை வழக்கிலும் போலீசார் தன்னை நெருங்கவே முடியாததால் சாமியார் கண்ணனுக்கு தைரியம் அதிக மானது.

யமுனாவின் கண்முன்னே

இந்த நிலையில் தனக்கு எதிராக செயல்பட்டு யமுனாவை விட்டு பிரிக்க முயன்ற யமுனாவின் மகன் செல்வக்குமார், மகள் சத்யாவையும் அதே போன்று கொலை செய்து புதைத்து விடலாம் என முடிவு செய்து அதற்காக திட்டம் தீட்டியுள்ளான்.

தீபாவளி தினத்தில்

கடந்த 2-ந் தேதி தீபாவளி அன்று, செல்வக்குமாரை கொலை செய்து துறையூர் புலிவலம் அருகே காட்டுக் குளம் ஏரியாவில் ஒரு மூட்டையில் கட்டி வீசிவிட்டான். அடுத்து 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று அதே இடத்தில் சத்யாவை கொலை செய்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு வீசியுள்ளான்.

காட்டிக்கொடுத்த டிரம்

இந்தக் கொலைகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. டிரம்மில் சிவா ஏஜென்ஸி என்ற பெயர் இருந்தது. இந்த கொலைச் செய்தியை லோக்கல் பத்திரிகையில் பார்த்த சிவா ஏஜென்ஸிக்காரர்கள், அந்த டிரம்மை வாங்கிச் சென்ற புகழேந்தியையும் அவரது தம்பியான மினிடோர் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியையும் கூப்பிட்டு விசயத்தைச் கூறினர். அதற்கு அவர்கள், பழைய பூஜை சாமான்களை நிரப்பி, அதைத் தூக்கிப்போடணும்னு எங்க ஏரியா கராத்தே சாமியார்தான் இதை வாங்கிட்டு வரச்சொன்னார் என்று திருவானைக்காவல் காவல் நிலையத்திற்கு போய் உண்மையை கூறவே வசமாக சிக்கினான் கண்ணன்.

ஷீரடி போன கண்ணன் - யமுனா

செல்வகுமார் - சத்யாவை கொலை செய்துவிட்டு ஷீரடி கோயிலுக்கு போயிருந்தார்களாம் கண்ணனும் யமுனாவும்! போன இடத்தில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். 'புனிதமான இடத்தில் சந்தோஷமாக இருந்தால் இறைவன் கேட்டதை எல்லாம் கொடுப்பாருன்னு எங்க குருஜி அடிக்கடி சொல்லுவாரு. வா... நாம இறைவனைத் தேடுவோம்' என்றபடி யமுனாவை இறுக்கமாக அணைத்தாராம். அங்கிருந்த சமயத்தில்தான் 'போலீஸ் உங்களைத் தேடுகிறது' என்று திருச்சியில் இருந்து போன் வந்திருக்கிறது. யமுனா சற்று அதிர்ச்சியாக, 'அதெல்லாம் பார்த்துக்கலாம் வா யமுனா...' என்று கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அணைத்திருக்கிறார் கண்ணன். இந்த தகவல்கள் அத்தனையும் யமுனாதான் போலீஸாரிடம் சொல்லியிருக்கிறார்.

நடித்துக் காட்டிய கண்ணன்

ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் கொலை செய்யப்பட்ட விதம், எரிக்க பெட்ரோல் வாங்கிய பெட்ரோல் பங்க், எரிக்கப்பட்ட இடம் செல்வக்குமார், சத்யா உடல் வீசப்பட்ட இடம் 12 வருடங்களுக்கு முன்பு தங்கவேல் புதைக்கப்பட்ட சமயபுரம் இடம் ஆகியவற்றையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் காட்டிய சாமியார் கண்ணன் இவற்றை எப்படி செய்தேன் என்பதையும் நடித்துக் காட்டினார். இவற்றையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

பெரியசாமி யார்?

ஐந்து கொலைகளை செய்ததை ஒத்துக் கொண்ட கண்ணன் திடீரென பெரியசாமி என்பவரது பெயரைக் கூறியுள்ளான். இந்த பெரியசாமி ஸ்ரீரங்கத்தில் காமாட்சி அம்மன் கோவில் கட்டியுள்ளார். 16 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணனை விட்டு பிரிந்து விட்டதாக கூறியுள்ள பெரியசாமி, கொலைகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் என கூறியுள்ளார்.

‘டாங் லீ' கண்ணன்

போலீஸார் வட்டாரத்தில் கண்ணனை 'டாங் லீ'' என்றுதான் கிண்டலாக அழைக்கிறார்கள். '7-ஆம் அறிவு' படத்தில் வில்லன் கேரக்டர் பெயர்தான் டாங் லி. நோக்கு வர்மம் தெரிந்தவர். தன் கண் அசைவில் மற்றவர்களின் மூளையை கன்ட்ரோல் எடுத்து, தான் செய்ய நினைப்பதை அவர்களை விட்டுச் செய்வார் அந்த டாங் லீ. கிட்டதட்ட அதேபோன்ற கேரக்டரைக் கொண்டவர்தான் கண்ணன் என்பதால், இவரை டாங் லீ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

குறிகேட்ட போலீசார்

போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகள் பற்றி சில சமயங்களில் கண்ணனிடம் குறி கேட்பார்களாம். அப்படி துரைராஜ் கொலை பற்றி இந்த டாங் லீ கண்ணனிடமே குறி கேட்டுள்ளனர். 'பூஜை போடுகிறேன்... உத்தரவு வந்திடும்.அப்புறம் சொல்றேன்' என்று போலீசாரை அனுப்பிவைத்துள்ளான். கடைசியில் துரைராஜ் கொலையில் டாங்லீ கண்ணனே சிக்கிக் கொண்டான்.

வெளிவரும் க்ரைம் கதைகள்

19 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சியில் பிரேமானந்தா சாமியார் விவகாரம் எப்படி திகிலைக் கிளப்பியதே, அதுபோல தற்போது திகிலைக் கிளப்பி வருகிறார் 'டாங் லீ'' சாமியார் கண்ணன். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஐந்து கொலைகளை அரங்கேற்றிய பயங்கர கொலையாளி கண்ணனைப் பற்றிய க்ரைம் கதைகள் தினம்தினம் வெளிவந்தபடி இருக்கின்றன.

English summary
Having arrested T. Yamuna (49) of Tiruvanaikoil in connection with the Vaiyampatti double murder case, the Crime Branch CID took the woman in their custody for interrogation after obtaining a court order on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X