ரயில் கொள்ளைச் சம்பவம்... பணத்திற்கு பாதுகாப்பாக ரயிலில் சென்ற 9 போலீஸாரிடம் விசாரணை
சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் சுமார் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்றது.
கடந்த சில நாட்கக்கு முன்பு சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு சுமார் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காததையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலைய ஊழியர்களிடமும், சேத்துப்பட்டு பணிமனையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சேலம்-சென்னை இடையே உள்ள ரயில் நிலையங்களுக்கு தனிப்படை அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னலில் ரயில் நின்ற இடங்கள் மற்றும் ரயில் மெதுவாக இயக்கப்படும் பகுதிகள் ஆகியவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் பணத்திற்கு பாதுகாப்பாக ரயிலில் சென்ற சேலம் மாநகர ஆயுதப்படை டிஎஸ்பி உள்ளிட்ட 9 போலீசாரிடம் நேற்று முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் செல்வராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
சிறப்பு விசாரணை அதிகாரியான நெல்லை மாநகர துணை ஆணையர் அமித்குமார் சிங், பணத்திற்கு பாதுகாப்பாக சென்ற 9 போலீசாரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். இதேபோல சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதியும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.