வேலை தருவதாக ஏமாற்றி வெளிநாட்டு பெண்களை விபசாரத்தில் தள்ளிய கும்பல் கைது: சிபிசிஐடி அதிரடி
சென்னை: விபசாரத்துக்காக தலா ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் 4 பேரை தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக பெங்களூர் அழகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேச நாட்டைச் சேர்ந்த 4 இளம்பெண்கள், பெங்களூரில் விபசார தொழிலுக்கு விற்கப்பட்டனர். அந்த நாட்டைச் சேர்ந்த ராஜா என்ற ராஜா ஷேக் என்பவர், 4 பெண்களையும் நல்ல வேலையில் சேர்த்து விடுவதாக பெங்களூர் அழைத்து வந்தார். பின்னர் அந்த 4 பெண்களையும், தலா ரூ.1 லட்சத்திற்கு விலை பேசி, விபசார தொழிலுக்காக விற்று விட்டதாக கூறப்படுகிறது.
விபசார தாதாக்களிடம் சிக்கினர்
பெங்களூரைச் சேர்ந்த பிரபல விபசார தாதா மஞ்சுநாத், அந்த 4 இளம்பெண்களையும் விலைக்கு வாங்கினார். இந்த இளம்பெண்கள் மிகவும் கொடுமை படுத்தப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்டனர். இந்த பெண்களில் ஒருவர் மதுரை விபசார தாதா வேல்ராஜிடமும், இன்னொரு பெண் காரைக்காலைச் சேர்ந்த பெண் விபசார தாதா கஜீதாபீவியிடமும் மறு விற்பனை செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரும், ஒரு பெண்ணை மறு விலைக்கு வாங்கினார். இப்படி 4 பெண்களும் தமிழகம் மற்றும் காரைக்கால் விபசார தாதாக்களிடம் சிக்கித்தவித்தனர்.
சிபிசிஐடிக்கு தகவல்
இதுபற்றிய ரகசிய தகவல் சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு போலீசாருக்கு தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி, விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்களை மீட்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, விபசாரத்தில் தள்ளப்பட்ட வங்கதேச பெண்கள் 4 பேரையும் மீட்டனர். மஞ்சுநாத், வேல்ராஜ், சதீஷ், கஜீதாபீவி, நாகலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
விபசாரத்துக்கு பெண்ணும் உடந்தை
விபச்சாரத்திற்கு உடந்தையாக இருந்த மஞ்நாத்தின் மனைவி கஜோலி என்ற அஞ்சலியை (28) போலீசார் தேடி வந்தனர். கஜோலியும் தற்போது பெங்களூரில் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டார். மஞ்சுநாத் மட்டும் பெங்களூர் சிறையில் உள்ளார். கஜோலி உள்பட மற்ற அனைவரும், சென்னை புழல் மத்திய சிறையில் தள்ளப்பட்டனர்.
இன்டர்போல் போலீஸ் உதவி
வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி விலைக்கு விற்று விபசாரத்தில் தள்ளிய ராஜாஷேக்கை சர்வதேச போலீசார் (இன்டர்போல் ) உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பெண்கள், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள்.