ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 70 பேர் கொண்ட 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சேலம் - சென்னை ரயில் பெட்டியில் ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 70 பேர் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தாம்பரத்தில் உள்ள கேமராவைப் பார்த்தபோது பணம் கொண்டு வந்த ரயில் பெட்டி உடைக்கப்படாமல் இருந்தது. இதனால் தாம்பரம் வரை கொள்ளையடிக்கப்படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, கொள்ளை நடந்த ரயில் பெட்டியை எழும்பூர் முதல் தாம்பரம் வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காட்சிகளை பதிவு செய்ய ரயில் பெட்டி இயக்கப்படுகிறது. ரயில் பெட்டி இயங்கும் போது அதனை சிசிடிவி யில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிறது. ரயில் பெட்டியுடன் டீசல் எஞ்சினை இணைத்து சோதனை நடைபெறுகிறது.
இதனிடையே இந்த கொள்ளையை விசாரிக்க 70 பேர் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை, சேலம், ஈரோடு, விருதாசலம் ஆகிய பகுதிகளில் விசாராணை மேற்கொள்ள உள்ளதாகவும், தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா மூலம் தடவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருதாகவும் கூறியுள்ளனர்.