ராமஜெயம் வழக்கு: மதுரை ஹைகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி அறிக்கை நாளை தாக்கல்..சிபிஐ விசாரணை வருமா?
திருச்சி: பரபரப்பான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நாளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
இதை வைத்து சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைப்பதா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றக் கிளை முடிவெடுக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
ராமஜெயம் அதிகாலை வாக்கிங் சென்ற போது அவரை கடத்திய கும்பல் சித்ரவதை செய்து கொன்று திருச்சி - கல்லணை ரோட்டில் திருவளர்சோலை என்ற இடத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.
ராமஜெயத்தை கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து திருச்சி சி.பி.சி. ஐ.டி போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அரசியல் போட்டி, கிரானைட், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி, முன் பகை உள்பட பல காரணங்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், ரவுடிகள் என பலரிடம் விசாரணை நடந்தது.
ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட நாளன்று அவரது வீட்டின் சுற்றுப்பகுதி, அவர் வாக்கிங் சென்ற பகுதி, அவரது பிணம் கிடந்த பகுதி ஆகிய இடங்களில் பயன்பாட்டில் இருந்த செல்போன்கள் மூலம் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது. அதே போன்று ராமஜெயம் செல்போனுக்கு அதிக முறை தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் பட்டியல் தயாரித்தும் விசாரணை நடந்தது.
ஆனால் 3 வருடங்கள் ஆகியும் வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு துலங்க வில்லை. இதனால் ராமஜெயத்தின் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். ராம ஜெயத்தின் மனைவி லதா தனது கணவர் கொலை வழக்கு விசாரணையை சி.பி. ஐக்கு மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடந்த மாதம் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா கடந்த 3 வருடங்களில் ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணை குறித்த தகவல்கள் திரட்டிய ஆதாரங்கள், விசாரணை நிலவரம் ஆகியவற்றை ஜனவரி 9 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சி.பி.சி. ஐ.டி போலீசார் ராமஜெயம் கொலை குறித்து இதுவரை நடத்திய விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள், வழக்கு முன்னேற்றங்கள், விசாரித்த நபர்கள், திரட்டிய ஆதாரங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள்.