ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை.. சேலத்தில் சிக்கியது முக்கியத் துப்பு.. சிபிசிஐடி தகவல்!
சென்னை: ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன வழக்கில் புதிய தடயங்கள் சிக்கியுள்ளன. சேலம் அருகே இருப்புப் பாதையில் ரயிலில் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து கடந்த 8ம் தேதி சென்னை சென்ற ரயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு வங்கி பணம் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் கொள்ளையின் போது உடைக்கப்பட்ட 2 மரப்பெட்டிகளை எழும்பூர் ரயில்வே பார்சல் அலுவலகத்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு 20,16 எண் கொண்ட அந்த மரப்பெட்டிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. விசாரணைக்கு தேவைப்பட்டதால், அந்த மரப்பெட்டிகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் 2 மரப்பெட்டிகளை ஆய்வுக்காக மயிலாப்பூர் கலங்கரை விளக்கம் எதிரே உள்ள தடயஅறிவியல் துறைக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கொள்ளை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் அருகே, ரயிலின் மேற்கூரையை துளையிட பயன்படுத்திய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்புப் பாதையில் புதிய தடயங்கள் பலவும் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தடயங்கள் கிடைத்துள்ளதை அடுத்து 20 பேர் கொண்ட சிறப்புப்படை சேலத்தில் விசாரணை நடத்தி வருகிறது.