நிர்மலாதேவியுடன் மதுரை வந்த 2 பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை
நிர்மலாதேவியுடன் மதுரை வந்த 2 பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை: மாணவிகளை தவறான வழியில் செல்ல ஆசைவார்த்தை காட்டி சிக்கியிருக்கும் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். மேலும் நிர்மலாதேவியுடன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு வந்த 2 பேராசிரியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். இன்று 3-வது நாளாக நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்றது.
மதிப்பெண்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ள முயற்சித்ததில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் பெயரை நிர்மலாதேவி வெளியிடவில்லை. ஆனால் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என்று மட்டும் நிர்மலா கூறியுள்ளார்.
இந்த நிலையில் நிர்மலாதேவியுடன் மதுரை காமராஜர் பல்கலைக் கழக புத்தாக்க பயிற்சிக்கு வந்த 2 பேராசிரியர்களும் தற்போது விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று இந்த 2 பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது நிர்மலாதேவியை தூண்டிவிட்ட கருப்பு ஆடுகள் யார் என்பது விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.