நிர்மலா தேவியின் ரகசிய டைரியில் விஐபிக்கள் பெயர் - 4ஆவது நாளாக சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் விசாரணை சூடுபிடித்துள்ளது. 4வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
விருதுநகர்: பாலியல் தொழிலுக்கு மாணவிகளை அழைத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் 4வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்னர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்காக மூளைச்சலவை செய்யும் வகையில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து கடந்த 17ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்த நிர்மலா தேவியை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகரில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மற்றும் துணை பேராசிரியர் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார். நிர்மலா தேவி கூறிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இருவர் தலைமறைவு
இதனிடையே தலைமறைவான ஆராய்ச்சி மாணவரை தேடி அவரது சொந்த ஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் சென்றனர். தலைமறைவாக உள்ள காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர், மற்றும் துணை பேராசிரியரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
மாணவிகள் தகவல்
நிர்மலாதேவியை சிபிசிஐடி காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சிபிசிஐடி போலீசார் தேவாங்கர் கல்லூரியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் வற்புறுத்தல் பற்றி பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர். இதனை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிடுக்கிப்பிடி விசாரணை
நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்று கண்டுபிடிக்க சிபிசிஐடி அதிகாரிகள் தோண்டி துருவி வருகின்றனர். முன்னதாக நேற்று அருப்புக்கோட்டையின் புறநகர் பகுதியான ஆத்திப்பட்டியில் நிர்மலாதேவி வீட்டிற்கு அழைத்து சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அவர் முன்னிலையில் சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள்
வீட்டிற்குள் இருந்து முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் பென் டிரைவ் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர். நிர்மலாதேவியின் காரிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை போட்டனர். அப்போது ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் நிர்மலாதேவியின் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெலிபோன் எண்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
நிர்மலாதேவிக்கு பரிசோதனை
இந்தச் சோதனையின்போது ஆத்திபட்டி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உடன் இருந்தார். 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற பின்னர் வீட்டினை பூட்டி சீல் வைத்தது சிபிசிஐடி. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நிர்மலா தேவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.
ரகசிய டைரியில் விவிஐபிக்கள் பெயர்
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்றும், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவியை அவரது சகோதரர் ரவி சிபிசிஐடி அலுவலகத்தில் சந்தித்து பேசினார். நிர்மலா தேவியுடன் புத்தாக்க பயிற்சியில் இருந்த பெண் பேராசிரியையை, மேலும் கரூரை சேர்ந்த ரயில்வே துறை பணியாளர்கள், நிர்மலா தேவிக்கு தெரிந்த நபர்கள் என அனைவரையும் வரவழைத்து விசாரித்தனர். நிர்மலாதேவியுடன் தொடர்பில் இருந்த பலரும் இப்போது விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பதால் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
ரகசிய டைரியில் உள்ள பலரையும் விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.