பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம்: தேவாங்கர் கல்லூரியிலிருந்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் தேவாங்கர் கல்லூரியிலிருந்து விசாரணையை தொடங்கினர்.
அருப்புக்கோட்டை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் தேவாங்கர் கல்லூரியிலிருந்து விசாரணையை தொடங்கினர்.
பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது. இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நீதிபதி உத்தரவு
பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
நிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்த தொடங்கினர்.
கோரிக்கை
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் ஆளுநரோ இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தன்னால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தின் விசாரணை அறிக்கைக்கு பிறகு அதை பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
அச்சத்தில் நிர்மலா
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு சிறையில் அசாதாரண சூழல் நிலவுவதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். இதை அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் நேற்றைய தினம் தெரிவித்தார். இதேபோல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழுவும் இன்று மதுரையில் இருந்து விசாரணையை தொடங்குகிறது.