ஐபிஎல் சூதாட்ட வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுங்கள்: சிபிசிஐடி கோரிக்கை
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமான ஐபிஎல் பெட்டிங் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : வழக்கமாக குற்றவாளிகள் தரப்பில்தான் நீதிமன்றத்தை மாற்றக்கோரி மனுதாக்கல் செய்வார்கள் ஆனால், தமிழகத்தின் ஆகச்சிறந்த புலனாய்வு அமைப்பான சிபிசிஐடி போலீசார் ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரணை செய்யும் நீதிமன்றத்தை மாற்றக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2013-ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த குருநாத் மெய்யப்பன், ஹோட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வால், ஹரிஷ் பஜாஜ் என 22 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் பல குளறுபடிகள் இருப்பதாக ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரணை செய்து வரும் சென்னை சைதாபேட்டை 11 வது குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முறையாக விசாரிக்கவில்லை
வழக்கை விசாரிக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது ஐ.பி.எல். போட்டிக்கு தரகர்கள் சென்ற தகவல்கள் குறித்து இடம்பெறவில்லை? இந்த வழக்கில் குருநாத் மெய்யப்பனுக்கும் விக்ரமுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு என்பது விளக்கப்படவில்லை? இந்த வழக்கில் குருநாத் மெய்யப்பனையும் வின்டூதரசிங்கையும் ஏன் விசாரிக்கவில்லை? விசாரித்து இருந்தால் அதன் தகவல்களை தரவேண்டும். இல்லை என்றால் ஏன் விசாரிக்கவில்லை என்று விளக்கமளிக்க வேண்டும் என்று கேள்விகளால் துளைத்துள்ளது நீதிமன்றம்.
துளைத்தெடுத்த நீதிபதி
குருநாத் மெய்யப்பன் மற்றும் வின்டூதரசிங் ஆகியோரின் செல்பேசி உரையாடல் பரிசோதிக்கப்பட்டதா? பரிசோதிக்கப்படவில்லை என்றால் ஏன் என்று விளக்க வேண்டும். உத்தமன் ஜெயின் என்ற கிட்டி, விக்ரம் ஆகியோரிடம் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முன்னும், விளையாடிய பின்னரும் குருநாத் மெய்யப்பன் மற்றும் விக்ரம் உரையாடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது உள்பட 13 கேள்விகளை நீதிபதி முன்வைத்தார்.
தகவல் கசிந்தது எப்படி?
சிபிசிஐடி போலீசாரின் அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தகவல்களை வெளியே கசியவிட்ட விவகாரத்தில் கூட்டு சதிகுறித்தும், மோசடி குறித்தும் முறையாக விசாரணை நடத்தப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 23 சிம்கார்டுகள் போலியான பெயர்களில் வாங்கியுள்ளது குறித்தும், அதைபயன்படுத்திவர்கள் குறித்தும் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வியையும் கேட்கத் தவறவில்லை நீதிமன்றம்.
அனுமதிக்க முடியாது
இந்த நிலையில் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி பிரகாஷ் சிபிசிஐடி விசாரணை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜகா வாங்கிய சிபிசிஐடி
விசாரணையில் பல சந்தேகங்கள் இருப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைத்தன்மை எந்த அளவிற்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏமாந்த ரசிகர்கள்
ஐபிஎல் போட்டி என்றால் சென்னை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது ஆனால் 2013ல் நடந்த சூதாட்ட புகார் சர்ச்சையால் 2015ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் அணியில் இடம் பெறாததால் சென்னை ரசிகர்களுக்கு ஐபிஎல் கொண்டாட்டம் அவ்வளவாக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.