நிர்மலா தேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் சோதனை... ஆதாரங்களைத் தேடும் அதிகாரிகள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வீட்டில் அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி அவர்களை வைத்து தனக்கான காரியங்களை சாதிக்க நினைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி மாணவிகளுடன் உரையாடிய ஆடியோ வெளியானதையடுத்து அவர் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி முழுவதும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து அரசு சார்பில் நிர்மலா தேவி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அவர் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2வது நாளாக நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரின் குரல் மாதிரியை பரிசோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா தேவியின் காரியத்திற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலா தேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நிர்மலாதேவி உறவினர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு இந்த சோதனையானது நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பணப்பரிமாற்றத்திற்கு நிர்மலா தேவி என்ன வழியை பயன்படுத்தினார், அதற்கான வங்கி ஆவணங்கள் இருக்கின்றனவா என்று போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போன்று நிர்மலா தேவி யார் யாருடன் தொடர்பில் இருந்தார் அது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறதா என்றும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.