சிக்காத ஆதாரம்... நிர்மலா தேவியின் போலீஸ் காவலை நீட்டிக்க சிபிசிஐடி விருப்பம்!
பேராசிரியை நிர்மலாதேவியின் போலீஸ் காவல் நாளையோடு முடிவடையும் நிலையில் மேலும் 10 நாட்கள் காவல் கோர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலா தேவியின் போலீஸ் காவலை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து கேட்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர். நிர்மலா தேவி மீண்டும் போலீஸ் காவலில் செல்வதற்கு முன்னர் சந்தானம் குழு அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று பார்த்தால், இதுவரை விசாரணை மட்டுமே நடக்கிறதே தவிர எந்த பெருச்சாளியும் வெளியே வந்ததாக தெரியவில்லை. நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமியோடு விசாரணை வளையம் நிற்கிறது.
22 மணி நேர விசாரணைக்குப் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டு அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பசாமி இன்று வரை தலைமறைவாகவே இருக்கிறார். இந்நிலையில் நிர்மலாதேவியை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு நீதிமன்றம் அளித்த காவல் நாளையோடு முடிவடையும் நிலையில், அவரை மீண்டும் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர் சிபிசிஐடி போலீசார்.
அப்போது மேலும் 10 நாட்கள் கஸ்டடி கேட்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே நிர்மலாதேவி மீண்டும் போலீஸ் கஸ்டடிக்கு செல்வதற்கு முன், அவரிடம் விசாரணை நடத்திட வேண்டும் என ஆளுநர் நியமித்த சந்தானம் விசாரணை கமிஷன் திட்டமிட்டுள்ளது. எனினும் சந்தானம் கமிஷனுக்கு நேரடியாக நிர்மலாதேவியை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்பதால் அவர்கள் நீதிமன்ற அனுமதியுடனே இந்த விசாரணையை நடத்த முடியும் என்ற நிலையும் நிலவுகிறது.