கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் சோதனை
சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்,24 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்ட திருச்செங்கோடு போலீஸார், தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். பின்னர், பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18ம் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பெற்றோர் போராட்டம் நடத்தவே, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையையும், கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் தங்களது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மாவீரன் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ், அவ்வப்போது வாட்ஸ் அப், டிவி பேட்டி என பரபரப்பு கிளப்பி வருகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கூறும் யுவராஜ் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருக்கிறார்.
இதனிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேரில் ஆஜராகுமாறு யுவராஜூக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். எனினும், யுவராஜ் ஆஜராகாததால், நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தேவைப்பட்டால், அவரை சுட்டுப்பிடிக்கவும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள யுவராஜின் சங்ககிரி வீட்டில், ஏடி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தற்போது அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.