முத்துக்குமாரசாமி வழக்கில் திருப்பம்... அதிமுகவினர் உள்பட 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை!
நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் வேளாண் துறையில் 119 ஓட்டுநர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. அப்போது, நெல்லையில் 7 பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட மேலிட அழுத்தம் காரணமாக வேளாண் செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
7 தற்காலிக டிரைவர்கள் நியமனம் செய்தது தொடர்பாக அதிமுகவினர் கொடுத்த நெருக்கடியே முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணம் என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வேளாண்மைதுறையில் காலியாக உள்ள டிரைவர்கள் நியமனத்தில் பணம் வசூலித்து தர வலியுறுத்தி மிரட்டியதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைதுறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பிரமுகர்களிடம் விசாரணை
நெல்லையை சேர்ந்த சில அ.தி.மு.க. பிரமுகர்கள், டிரைவர் வேலைக்கு சிபாரிசு செய்தவர்களை முத்துகுமாரசாமி நியமனம் செய்யாததால் அவர் மிரட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
6 பேருக்கு சம்மன்
இதனால் முத்துகுமாரசாமியின் செல்போனில் பதிவான எண்கள் மற்றும் முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சரின் உதவியாளர் செல்போனில் பதிவான எண்கள் மூலம் நெல்லை அ.தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பியும் ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.
பெண் அதிகாரியிடம் விசாரணை
நெல்லை வேளாண்மை துறையில் முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் அதிகாரி பணிபுரிந்து வருகிறார். அவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விசாரணை
அதேபோல், நெல்லையைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேளாண் துறை ஓட்டுநர்கள் நியமனம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால் மாநிலம் முழுவதும் அதிமுகவினரிடையே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.