கோகுல்ராஜ் கொலை: சுவாதியின் செல்போன் எங்கே? யுவராஜிடம் சிபிசிஐடி விசாரணை
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக அவரது தோழியின் செல்போனில் இருந்து முக்கிய தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அந்த செல்போனை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அந்த செல்போன் பற்றிய உண்மைகளைத் தெரிவிப்பதில் குழப்பி வருவதாகவும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் (37) கடந்த 11ம் தேதி நாமக்கல் மாவட்டம் சிபிசிஐடி போலீசில் சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். ஆனால் கோகுல்ராஜ் கொலை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு மவுனத்தை மற்றுமே யுவராஜ் பதிலாக கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கொலை செய்ததை யுவராஜ் ஒப்புக்கொள்ளவில்லை.
அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது யுவராஜை மேலும் 5 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சிபிசிஐடி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர்மதி, மேலும் 2 நாட்கள் அவரிடம் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாதியின் செல்போன் எங்கே?
கோகுல்ராஜின் தோழி சுவாதி, இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஜூன் 23ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கோகுல்ராஜுடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த யுவராஜ் தனது செல்போனை பறித்து சென்றதாக போலீசிடம் கூறினார். அந்த செல்போன் எங்கிருக்கிறது என்று கடந்த 5 நாட்களாக யுவராஜிடம் போலீசார் விசாரித்தனர்.
குழப்பும் யுவராஜ்
சுவாதியின் செல்போன் முதலில் பெங்களூரில் இருப்பதாகவும், பின்னர் கேரளாவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். செல்போனை பறிமுதல் செய்யும் நோக்கில் போலீசார் யுவராஜிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சுவாதியின் செல்போன் அழைப்பு விவரங்களை போலீசார் பெற்றுள்ளதில், ஜூன் மாதம் 23ம் தேதிக்கு பிறகு பலருக்கு போன் பேசப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. எனவே, அந்த செல்போன் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கொண்டு வர முடிவு செய்து உள்ளனர்.
எங்கே கொண்டு செல்வது?
இருப்பினும் அந்த செல்போன் தொடர்பாக போலீசார் யுவராஜிடம் விசாரணை நடத்தியபோது அவர் பெங்களூரு, கேரளா என மாறுபட்ட தகவலை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே அவரை எங்கு அழைத்து செல்வது என போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர். அத்துடன் அந்த செல்போனை யுவராஜ் உடைத்து வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. எனவே யுவராஜை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்தே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
கோவை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து வந்துள்ள சிபிசிஐடி. போலீசார் சுமார் 45 பேர் இவரது காவல் பணியில் 3 ‘சிப்டுகளாக' ஈடுபட்டு வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தின் வெளியே உள்ளூர் போலீசார் சுமார் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இன்றுமாலை 5.30 மணிக்குள் யுவராஜை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். எனவே அவரிடம் இருந்து பல்வேறு உண்மைகளை வரவழைக்க சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கார் டிரைவர் அருண்
இதனிடையே யுவராஜின் கார் டிரைவர் அருணையும் சிபிசிஐடி போலீசார் கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவரின் போலீஸ் காவல் ஞாயிறு மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் அருணை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
சேலம் சிறையில் அடைப்பு
அவருடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தயாரித்த வாக்குமூலம் 12 பக்கங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மலர்மதி, அருணை வருகிற 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.