கோகுல்ராஜை தெரியாது... அடம்பிடிக்கும் யுவராஜ்... அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்ற சிபிசிஐடி
சேலம்: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல கேள்விகளுக்கு யுவராஜ் பதில் கூறாமல் மவுனம் சாதிப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். கடந்த 3 நாட்களாக நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜிடம் எஸ்.பி நாகஜோதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
யுவராஜ் மறுப்பு
கோகுல்ராஜ் கொலை தொடர்பாக போலீசார் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனம் காத்துள்ளார். கோகுல்ராஜ் என்ற வாலிபரை பற்றியே தனக்கு ஏதும் தெரியாது. அதோடு சுவாதி என்ற பெண்ணும் தனக்கு அறிமுகமில்லை என கூறி விட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர்.
5 செல்போன்கள் எங்கே
போலீஸ் காவல் முடிந்து யுவராஜை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். அதற்குள் அடிப்படை ஆதாரங்களை திரட்டி ஆவணங்களை தயாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், யுவராஜ் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட 5 ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த செல்போன்கள் குறித்து கேட்டபோது அது எல்லாம் உடைந்து விட்டது என்று யுவராஜ் பதில் அளித்து விட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆதாரங்கள் சேகரிப்பு
100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த யுவராஜ் வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தி ஆடியோ வெளியிட்டார். டிவியில் பேசினார். இது பகிரங்கமாக நடந்துள்ளதால் இது தொடர்பான ஆதராங்கள் இந்த வழக்கில் முக்கியமாக சேர்க்கப்படுகிறது.
திருச்செங்கோடு கோவிலில் விசாரணை
இந்நிலையில், கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அதிகாலையில் அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை வளையத்தில்
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை நிகழ்ந்த அன்று, யுவராஜின் காருக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்த சங்ககிரியைச் சேர்ந்த ரமேஷ், கவுரி சங்கர் மற்றும் சிம்கார்டு விநியோகித்த நபர் ஒருவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அருணுக்கு காவல்
இந்த வழக்கில் தேடப்பட்ட யுவராஜின் டிரைவர் அருண், கடந்த 13ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நேற்று சிபிசிஐடி போலீசார் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அருணை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அருண் வயது என்ன?
அருண் சரணடைந்த போது தனக்கு 21 வயதாவதாக அருண் தெரிவித்தார். ஆனால், போலீசாரால் சமர்ப்பிக்கபட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கும், அருண் தெரிவித்த வயதிற்கும் முரண்பாடு இருந்தது. இதனால், அவரது உண்மை வயதை கண்டறிய, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார். இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அருண் அழைத்து வரப்பட்டு, அவருக்கு சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் கோகுலரமணன் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.