கோவையில் நீட்தேர்வு: மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் காதுகளில் டார்ச் அடித்து சோதனை நடத்தப்பட்டது.
Recommended Video
கோவை: கோவையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களின் காதுகளில் டார்ச் அடித்து சோதனை செய்யப்பட்டது செயல் அவர்களை மிகுந்த மனசங்கடத்திற்கு ஆளாக்கியது.
கோவையில் 32 மையங்களில் 15,960 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதினார்கள் . இதனால் மாணவர்கள் காலை 7.30 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர பகுதியில் 21 மையங்களும், புறநகர் பகுதியில் 11 மையங்களும் என மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் மாநகர் பகுதியில் 10,200 மாணவர்களும், புறநகர் பகுதியில் 5760 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
தேர்வுகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. முன்னதாக, தேர்வு மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், மாணவிகளின், தலைகளில் போடப்பட்டிருந்த ஹேர் பேண்டுகள் எடுக்கப்பட்டன.
அதேபோல, மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள், ஸ்டைல் பேண்டுகள், பெல்ட்டுகள் போன்றவைகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது. இதனால் அவர்கள் கடும் மனஅழுத்தம் மற்றும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.