திமுகவினர்போல் அதிமுகவினர் போலியாக கோவிலுக்கு செல்வதில்லை: அமைச்சர் வேலுமணி
அதிமுகவினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எனவும் திமுகவினர்போல் போலியாக கோவில்களுக்கு செல்வதில்லை எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் குடிநீர் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் துணை சபாநாயகர், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, குடிநீர் வினியோகம் தொடர்பாக வரும் அனைத்து புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குடிநீர் திட்டங்களுக்காக தோண்டப்படும் குழிகளை தரமான முறையில் மூடவும் விரைந்து சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குட்கா விவகாரம் தொடர்பான ஸ்டாலினின் கருத்து குறித்து கேட்ட போது, சிபிஐ விசாரணை முடிவில் திமுகவினர் தான் தண்டனை பெறுவார்கள் என்றார். திமுகவினர்போல் போலியாக கோவில்களுக்கு செல்வதில்லை எனவும் அதிமுகவினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
எந்த மாவட்டதிலும் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ காவல்துறையினரை பிற கட்சியினர் மீது வழக்கு பதிய தூண்டுவதில்லை என தெரிவித்த அமைச்சர் வேலுமணி, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து கண்டறிந்து வழக்கு பதிவு செய்து வருவதாகவும் அப்போது தெரிவித்தார்.