கோவை அருகே பயங்கரம்: கள்ள உறவு காரணமாக ஒருவர் சரமாரி வெட்டி கொலை
கள்ள உறவு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கோவை: சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் கள்ளத்தொடர்பு காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி 45. இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணும், ஒரு பையனும் உள்ளனர். அதே பகுதியில் கோபி என்கிற குமாரவேல் கேபிள் கலெக்சன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இவரது மகன் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கோபிக்கும் ராமசந்திர மூர்த்தியின் மனைவி லதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. லதா-கோபி தொடர்பு குறித்து ராமசந்திர மூர்த்தி கோபியை பலமுறை எச்சரித்தும் கண்டித்தும் உள்ளதாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து தன்னுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கோபி என்கிற குமாரவேலை கொலை செய்ய திட்டம் தீட்டினார் ராமச்சந்திர மூர்த்தி.
அதன்படி, கீரணத்தம் பகுதியிலுள்ள அரசு மதுபான கடையின் பார் ஒன்றிற்கு கோபியை நேற்று அழைத்து சென்றார்.பின்னர் அங்குவைத்து கத்தியால் ஆறு இடங்களில் இடது வயிற்றுப்பகுதியில் கோபியை குத்தினார். கோபி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த ஊழியர்கள் ராமசந்திரமூர்த்தியை பிடித்து சரவணம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.