கோவை ஆலாந்துறை அருகே கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
ஆலாந்துறை கோயில் விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோவை: கோவை ஆலாந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அக்னி சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் வழிபட்டனர்.
கோவை ஆலாந்துறை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆண்டு விழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதனடிப்படையில் கடந்த 1 ம் தேதி சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கிய நிலையில் நேற்று முக்கிய நிகழ்வான பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக ஆலாந்துறை சந்திப்பு பகுதியிலிருந்து அக்கினி சட்டியை கையிலேந்திய 250 பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றனர்.அப்போது 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் முகத்தில் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதேபோல் கிரேன் வாகனம் மூலம் முதுகு வாய் மற்றும் கைகளில் அலகு குத்தி பறவை போல் வந்தும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து ஊர்வலமான திருக்கோவிலை அடைந்த பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்று சென்றனர்.