அதிகார துஷ்பிரயோகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சோதனை செய்த சிபிஐ, குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். இன்று ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீடு மற்றும் அவரது அலுவலகம் உட்பட, அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இவர் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி சில நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாகவும், குற்றவியல் சதி செய்ததாகவும் கூறி, 120பி பிசி சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜெயந்தி நடராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 120பி, 13(2), 13/1 (டி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் ஜெயந்தி நடராஜன்.
சட்டவிரோதமாக வனத்துறை நிலத்தை குத்தகைக்கு விட அனுமதி கொடுத்ததாக ஜெயந்தி மீது புகாராகும். எலக்டோஸ்டீல் காஸ்டிங் நிறுவன முன்னாள் எம்.டி. உமங் கெஜ்ரிவால் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயந்தி நடராஜன் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது சுற்றுசூழல் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததற்கு லஞ்சம் வாங்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் லோக்சபா தேர்தலின் போது ஜெயந்தி வரி திட்டங்களால் வளர்ச்சி முடங்கியுள்ளது என்றும் மோடி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.