ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீதான புகார் என்ன? பரபரப்புத் தகவல்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடுகள், அலுவலங்களில், நேற்று சி.பி.ஐ., சோதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் தீவி
சென்னை: ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள விவகாரம் நாடு முழுவதும் அதிர்வைக் கிளப்பியுள்ளது.
2006ம் ஆண்டில் மும்பையில் தொடங்கப்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 2007ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறையின்கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் உள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 4.62 கோடி ரூபாய் அளவுக்கு, அந்நிய முதலீட்டைப் பெற, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார். ஆனால், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி ரூ305 கோடி அளவிலான அந்நிய முதலீட்டை, ஐஎன்எக்ஸ் ஊடக நிறுவனம் பெற்றுள்ளது.
ஐஎன்எக்ஸுக்கு நோட்டீஸ்
இந்த முறைகேட்டை மத்திய வருமானத் துறை கண்டுபிடித்தது. இதுபற்றி வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு 2008, பிப்ரவரி மாதத்தில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திற்கு, தகவல் தெரிவித்தது. இதன்பேரில் விளக்கம் அளிக்கும்படி ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அட்வைஸ் கொடுத்த கார்த்தி கம்பெனி
இதையடுத்து, சட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் ஊடக நிறுவனத்திற்கு உதவி செய்ய முன்வந்தார். இதற்காக, கார்த்தி இயக்குனராக இருக்கும் செஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு, 2008 ஜூன் 26 தேதியிட்ட கடிதம் மூலமாக, அறிவுரை வழங்கியது.
தப்பியது ஐஎன்எக்ஸ்
அதையே, ஐஎன்எக்ஸ் ஊடக நிறுவனம், தங்கள் தரப்பு விளக்கமாக, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அளித்தது. இந்த விளக்கத்தை, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டது. காரணம், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி என்பதால், அவருக்கு இருந்த செல்வாக்கே காரணமாகும். இதன்மூலமாக, ஐஎன்எக்ஸ் நிறுவனமும், கார்த்தியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.
கார்த்தி சிதம்பரம் நிறுவனம்
இந்த ஆலோசனை வழங்கியதற்கான கட்டணம், கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் நடத்திவரும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் பேரில் வழங்கப்பட்டிருந்தது. இது, கார்த்தியின் நிறுவனமாகக் கூறப்படுகிறது.
ரெய்டின் பின்னணி
விசாரணையில் இது உறுதியானதை தொடர்ந்து சிபிஐ நேற்று ரெய்டு நடத்தியது. ஐஎன்எக்ஸ் ஊடக நிறுவனம், அதன் வரவு செலவு கணக்கில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், அனுமதி பெறும் நடவடிக்கைக்காக, அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் நிறுவனத்திற்கு, 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட விவரத்தை, பதிவு செய்துள்ளது. இதன்மூலமாக, மத்திய நிதியமைச்சகத்தில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அதிகாரிகள் துணையுடன், தனியார் நிறுவனத்திற்கு, கார்த்தி சட்டவிரோதமாக அனுமதி பெற்று தந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
வழக்குகள்
எனவே, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி, 420 பிரிவுகள்- ஊழல் தடுப்புச் சட்டம் 13 (2), 13 (1) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, டெல்லி சிபிஐ பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி வசம் விடப்பட்டுள்ளது. இந்த தகவல் சிபிஐ பதிவு செய்துள்ள, எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஐஎன்எக்ஸ் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
விளக்கம்
அதேசமயம், கார்த்தி சிதம்பரம் இதுபற்றி கூறுகையில், ‘'அரசியல் பழிவாங்கும் காரணத்திற்காக, என் மீது சிபிஐ ஏவப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போதிய ஆதாரமின்றி தொடுக்கப்பட்ட புகார்களாகும். இதனை முறைப்படி எதிர்கொண்டு, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்,'' என்றார். அவரது தந்தையும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறும்போது, ‘'எனது அரசியல் பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில், பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது,'' எனக் குறிப்பிட்டார்.