திருப்பூரில் சிக்கிய ரூ570 கோடி கண்டெய்னர் பணம் வங்கிக்கு சொந்தமானதே- சிபிஐ அறிக்கை
திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என சிபிஐ அறிக்கை அளித்துள்ளது.
சென்னை: திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தமானது என திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த பணம் வங்கிக்கு சொந்தமானது என்று அறிக்கையில் கூறியுள்ளது.
2016 தமிழகச் சட்டசபை தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. அப்போது திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது.
அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இது எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமானது என்று அப்போது கூறப்பட்டது. இதனை ஏற்க எதிர்கட்சிகள் தயாராக இல்லை.
திமுக வழக்கு
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த ஆண்டு மே மாதம் திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளில் ரூ.570 கோடி இருந்தது. இந்தப் பணத்தைக் கொண்டு வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
கண்டெய்னர் லாரிகள்
பணம் கொண்டு வந்த 3 கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்களும் போலியானவை என்று தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் யாருக்காக, எங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிபிஐ விசாரிக்க உத்தரவு
அதன் பின்னர், சட்டத்துக்கு புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த மே 30ஆம் தேதி சி.பி.ஐ. இயக்குநர், இணை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதில் மர்மம் நீடித்துக் கொண்டே வருகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால், இந்த மர்மம் விலகும் என்றும் வாதிட்டார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கொடுத்த புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, அந்த புகாரின் நிலை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.