டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரண வழக்கு- பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 மணிநேரம் விசாரணை!
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடலூரில் அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்: டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்சங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது.இதற்கு தடைவிதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் எஸ்பி பாலாஜி தலைமையில் இன்று விசாரணையை தொடங்கினர். கடலூர்-கோண்டூரில் உள்ள விஷ்ணுப்பிரியாவின் பெற்றோரிடம் இன்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை நீடிக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.