தமிழக மருத்துவ மாணவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா?: ஈஸ்வரன் கேள்வி
தமிழக மருத்துவ மாணவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா என்று ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
சென்னை: டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறார்களா என்கிற சந்தேகம் எழுகிறது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி யூசிஎஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.எஸ் படித்து வந்த திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் சரத்பிரபு இன்று காலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மர்மமான முறையில் மரணங்கள்
அந்த அறிக்கையில், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு அவரது அறையில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.
விஷ ஊசி செலுத்தி கொலை
சரவணனின் உடற்கூறு பரிசோதனை அறிக்கையில், தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், யாரோ ஒருவர் விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் டெல்லி காவல்துறை தற்கொலை என்று சொல்லி இந்த விவகாரத்தை மூடி மறைக்கவே முற்பட்டது. அன்றைக்கு மருத்துவ மாணவன் சரவணனின் இறப்பை உரிய முறையில் விசாரித்திருந்தால், இன்று இன்னொரு தமிழக மாணவனின் இறப்பு தடுக்கப்பட்டிருக்கும்.
திட்டமிட்டு மாணவர்கள் கொலை ?
சரத்பிரபு இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். டெல்லி எய்ம்ஸில் தமிழகத்தை சார்ந்த அதுவும் திருப்பூரை சேர்ந்த மருத்தவ மாணவர்கள் மட்டும் தொடர்ந்து இறப்பது ஏன் ?. கடின உழைப்பால் மருத்துவத்தில் சாதிக்க துடிக்கும் மாணவர்களை திட்டமிட்டு கொலை செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் சிறந்த மருத்துவ கல்லூரியில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது மருத்துவ மேற்படிப்புக்கு வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும்.
மாணவர்களின் பாதுகாப்பில் கவனம்
எனவே வெளிமாநிலங்களில் அதுவும் குறிப்பாக டெல்லியில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகம் இரண்டு மருத்துவர்களை இழந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க தமிழக அரசும், தமிழக முதல்வர் அவர்களும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை அமைத்து தமிழக மருத்துவ மாணவர்கள் சரவணன் மற்றும் சரத்பிரபு ஆகிய இருவரின் உயிரிழப்பில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.