சட்டவிரோத எக்சேஞ்ச்- கலாநிதி, தயாநிதி மாறன் விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு
சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலைக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் எக்சேஞ்ச் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த 2004-2007-ம் ஆண்டுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் ஒன்றை நடத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார் என்பது சிபிஐ வழக்கு. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும் இதனால் ரூ1.78 கோடி அரசுக்கு இழப்பு என்பதும் சிபிஐ குற்றச்சாட்டு.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. 2016-ம் ஆண்டு டிசம்பரில் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதியன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். தற்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் மாறன் சகோதரர்களுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.