ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடியின் 9வது ரகசிய அறிக்கை தாக்கல் - ஒத்திவைப்பு
மதுரை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 9வது ரகசிய அறிக்கையை சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கட்கிழமையன்று தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கு நாளை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராமஜெயம் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி ராம ஜெயத்தின் மனைவி லதா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் இதுவரை 8 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
ரகசிய அறிக்கை
ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி சார்பில், 'ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை கைது செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு கால அவகாசம் கோரப்பட்டது.
நீதிமன்றம் கெடு
ராமஜெயம் கொலை வழக்கு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி 2 மாத கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தார். கொலையாளிகளை அக்டோபர்17ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இறுதிக்கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எனினும் வழக்கு விசாரணை வழக்கம் போலவே நடைபெற்றது.
ஒத்திவைப்பு
இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அக்டோபர் 17ம் தேதி திங்கட்கிழமை நீதிபதி பஷீர்அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 9வது முறையாக விசாரணையின் ரகசிய அறிக்கையை சீலிடப்பட்ட கவரின் போட்டு தாக்கல் செய்தனர். அதனை படித்து பார்க்க வேண்டியது இருப்பதால் விசாரணையை புதன்கிழமை அக்டோபர் 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா?
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நான்கரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுநாள்வரை குற்றவாளியின் நிழலைக்கூட சிபிசிஐடி போலீசார் நெருங்கவில்லை. ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிடுவாரா? அல்லது வழக்கம் போல சிபிசிஐடிக்கு அவகாசம் வழங்குவாரா? நாளை தெரியும்.