ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பஷீர்அகமது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதியன்று திருச்சி பாலக்கரையில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
5 ஆண்டுகள் முடிவு
ராமஜெயம் கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் ஒருவரைக்கூட போலீஸார் கைது செய்யவில்லை இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது.
சிபிசிஐடி அறிக்கைகள்
இந்த வழக்கு நீதிபதி பஷீர்அகமது முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் சார்பில் 12வது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ராமஜெயம் கொலை தொடர்பாக 300 காரணங்கள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
சிபிஐக்கு மாற்ற கோரிக்கை
சிபிசிஐடி போலீஸார் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் வழக்கறிஞர் ரவி வாதிட்டார்.
இரு தரப்பு வாதம்
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கைகளை படித்து பார்க்க வேண்டியதுள்ளது என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராமஜெயம் கொலை குறித்து 12 விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நம்பிக்கை இல்லை என லதா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஐக்கு வழக்கை விசாரிக்கும் தகுதி உள்ளதாகவும் லதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். ராமஜெயம் கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குற்றவாளியின் நிழலைக்கூட போலீசார் நெருங்கவில்லை. அறிவியல் ரீதியான விசாரணை நடைபெற்றும் குற்றவாளிகள் யார் என்று பிடிபடவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதி உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.