மீண்டும் சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சியில் சிபிஐ டீம் முகாம்!
ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமாகியுள்ளதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அதிகாலையில் படுகொலை செய்யப்பட்டார். 6 ஆண்டுகளாகியும் இவ்வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிஐ-க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது.
ரகசிய விசாரணை
இதையடுத்து சென்னையில் இருந்து திருச்சி வந்த சிபிஐ அதிகாரிகள் ராமஜெயம் உடல் கிடந்த இடம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடத்தினர். பின்னர் பலரிடமும் ரகசிய விசாரணை நடத்தினர்.
காலத்தை ஓட்டிய சிபிசிஐடி
இவ்வழக்கில் ராமஜெயம் குடும்பத்தினரிடம் உரிய முறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை என்கின்றன சிபிஐ வட்டாரங்கள். இது தொடர்பாக கேட்டபோது, குடும்பத்தினர் வருத்தத்தில் இருக்கின்றனர் என்று சொல்லியே காலத்தை ஓட்டியுள்ளனர் சிபிசிஐடி அதிகாரிகள்.
தடயம் இல்லா கொலை
இதுதான் தங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது என்கின்றன சிபிஐ வட்டாரங்கள். தமிழகத்தில் நடந்த பல அரசியல் கொலைகள் தடயங்களே இல்லாதவைகளாக கனகச்சிதமாகத்தான் நடந்திருக்கின்றன.
ஸ்டைலில் விசாரித்தால் உண்மை வரும்
ராமஜெயத்தின் கொலையும் அப்படியான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும் விசாரணை வளையத்தில் இருப்பவர்களை உரிய முறையில் கவனித்தால் மர்மங்கள் விலகும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறது சிபிஐ டீம்.