7 கி.மீ. பைபர் கேபிள் அமைத்து முறைகேடு: சன் டி.வி. முன்னாள் நிர்வாகி சக்சேனா ஒப்புதல்
சென்னை: முறைகேடான தொலைபேசி இணைப்புகளுக்காக தயாநிதி மாறனின் வீட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவுக்கு பைபர் கேபிள் அமைக்கப்பட்டதாக சன் டி.வி. குழுமத்தின் துணைத் தலைவராக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு கைது செய்தனர். தயாநிதி மாறனின் நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிபிஐ அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
சக்சேனா - சரத்குமார்
சன் டி.வி.யின் துணைத் தலைவராக (நிகழ்ச்சி தயாரிப்பு) இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இதேபோல, அந்த குழுமத்தின் சி.ஓ.ஓ. ஆக பணிபுரிந்தவர் சரத்குமார். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததோடு மட்டுமன்றி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.
விலகிய நண்பர்கள்
தொலைபேசி இணைப்பு முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட காலத்தில் சக்சேனாவும், சரத்தும் அந்த பொறுப்புகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், தயாநிதி மாறனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்சேனாவும், சரத்தும் சன் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து விலகி, வெளியே வந்துவிட்டனர்.
இருவரிடம் விசாரணை
இந்த நிலையில், தொலைபேசி இணைப்பக முறைகேடு தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் சென்னையில் முகாமிட்டிருந்தபோது, சக்சேனாவிடமும், சரத்திடமும் விசாரணை செய்தனர்.
உறுதிபடுத்திய சி.பி.ஐ
இந்த விசாரணையில் தொலைபேசி இணைப்பக முறைகேடு நடைபெற்றதை அவர்கள் இருவர் மூலம் சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இப்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எஸ்.என்.எல் இணைப்புகள்
இந்த கைது தொடர்பாக கருத்து கூறியுள்ள சக்சேனா, சிபிஐ விசாரணையின்போது எங்களைக் காப்பாற்றிக் கொள்ள உண்மையைக் கூறினோம். போர்ட் கிளப்பில் தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல். இணைப்புகளின் ஒரு பகுதி பட்டினப்பாக்கம் சன் டி.வி. அலுவலகத்துக்கும், மற்றொரு பகுதி நுங்கம்பாக்கம் ஆண்டர்சன் சாலையில் வசித்த அப்போதைய சி.ஓ.ஓ. சரத்குமார் வீட்டுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
7 கிலோமீட்டர்
இதற்காக 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் கேபிள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சரத்குமார் சன் டி.வி. நிறுவனத்தை விட்டு வெளியேறிதும், அந்த இணைப்புகள் கல்லூரி சாலையில் வசித்த எனது வீட்டுக்கு மாற்றப்பட்டன.
கண்ணன், ரவி
கைது செய்யப்பட்ட கண்ணன், ரவி ஆகிய இருவரும்தான் இணைப்புகளை வழங்குவது, தொழில்நுட்ப பிரச்னைகளை கையாளுவது போன்றவற்றை செய்தனர். இதை நாங்கள் எங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளோம்.
அடிக்கவில்லை
சிபிஐ அதிகாரிகள் எங்களை அடிக்கவில்லை, துன்புறுத்தவில்லை சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்குத் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொண்டே, எங்களிடம் விசாரணையை மேற்கொண்டனர் என்றார் அவர். சக்சேனா, சரத்குமார் வாக்குமூலத்துக்குப் பின்னரே விசாரணை வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.