முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மன்மோகன்சிங் அமைச்சரவையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜெயந்தி நடராஜன். திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராகுல்காந்தி மீது புகார் கூறிவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் காலை 5.30 மணி முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆவணங்கள் பற்றி தெரியவரும்.
ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த போது ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 512.43 ஹெக்டேர் நிலம், ஜிந்தால் ஸ்டீல் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்திடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டியது. இதில் வனத்துறை அதிகாரிகள் சிலரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் தகவல்களையும் சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடமும் சி.பி.ஐ. தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
இதையடுத்து நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. 4 ஆண்டுகள் கழித்து தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.