தயாநிதி மாறன் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் சிபிஐ மனு
சென்னை: தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் டெல்லியில் நடைபெற்ற விசாரணையின் போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும், காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐயின் மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். 2007ல் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியதும், திமுக மக்களவை உறுப்பினராக நீடித்தார். அப்போது அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் ‘24371515' சேவையை ‘எம்.பி. ஒதுக்கீட்டுக்கானதாக மாற்றித் தரும்படி பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, ‘தயாநிதி மாறன் குறிப்பிட்ட ‘2437' எனத் தொடங்கும் தொலைபேசி எண்ணுக்குரிய சேவை, சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல. அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன' என்பது கண்டறியப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
டெலிபோன் எக்சேஞ்ச்
2007ம் ஆண்டு மார்ச் மாதம் 24371515 என்ற ஒரு எண்ணில் இருந்து மட்டும் 48 லட்சத்து 72,027 ரூபாய் அளவிற்கு டெலிபோன் கால் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். 323 தொலைபேசி லைன்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ.440 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது சிபிஐயின் புகாராகும். இந்த வழக்கு தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சி.பி.ஐ குடைச்சல்
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி கடந்த ஜூன் 29ம் தேதி, தயாநிதிமாறனுக்கு ஃபேக்ஸ் மூலமும் தொலைபேசி மூலமும் தகவல் அனுப்பியது சிபிஐ ஏற்கெனவே, இந்த வழக்கில் கண்ணன், ரவி, கௌதமன் என சன் டி.வி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தானும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய தயாநிதிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
நிபந்தனை முன் ஜாமீன்
தயாநிதிமாறன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத நேரத்தில், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை சிபிஐ அணுகலாம் என்று குறிப்பிட்டு முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
ஒத்துழைக்காத தயாநிதி
கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் சுமார் 35 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு உண்மையைக் கூட தயாநிதி ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சிபிஐ அதிரடி
தயாநிதி மாறன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் இன்று தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ரத்து செய்யக் கோரிக்கை
சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் டெல்லியில் நடைபெற்ற விசாரணையின் போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும், காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐயின் மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன் ஜாமீன் ரத்தாக வாய்ப்பு?
தயாநிதி மாறனின் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைத்து ஆதாரப்பூர்வமாக கைது செய்ய முடிவு செய்துள்ளனராம் சிபிஐ அதிகாரிகள். தயாநிதி மாறனின் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவதைப் பொறுத்தே சிபிஐ அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கை இருக்கும்.