570 கோடி கண்டெய்னர்.. விசாரிக்காமலேயே சிபிஐ அறிக்கை தாக்கல்.. டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு:வீடியோ
கண்டெய்னரில் இருந்த 570 கோடி ரூபாய் குறித்து விசாரிக்காமலேயே அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சிபிஐ என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: ஒரு வங்கி எப்படி விதிகளை மீறி 570 கோடி ரூபாயை வைத்திருக்க முடியும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் குறித்து திமுக சிபிஐ இயக்குநருக்கு புகார் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
தற்போது சிபிஐ, இந்த பணம் வங்கிக்குச் சொந்தமானது என உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
570 கோடியை எப்படி வைத்திருக்க முடியும்?
''ஒரு வங்கி இத்தனை கோடி ரூபாய்தான் வைத்திருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு வங்கி எப்படி 570 கோடி ரூபாய் வைத்திருக்க முடியும்?
போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் பணம் கடத்தல்
அதை மீறி அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு கிளையில் எப்படி அத்தனை கோடி ரூபாயை வைத்திருக்க முடியும்? ஒரு வங்கி கிளையில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை அனுப்பினால், போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த வாகனங்கள் போலீசாரைப் பார்த்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டும்?
சிபிஐக்கு எண்ணம் இல்லை..
அது வங்கிக்கு சொந்தமான பணம் என்று அமைச்சர் சொன்ன பிறகுதான் ஆவணங்களை தயார் செய்து கொடுக்கிறார்கள். அப்போதே சிபிஐ இதுகுறித்து விசாரணை செய்யும் எண்ணம் இல்லை என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள்.
விசாரிக்காமல் சிபிஐ அறிக்கை
நீதிமன்றத்திலேயே, மனுதாரர் வங்கியிலேயே கேட்டுக் கொள்ளலாமே என்னும் போக்கில் தான் கூறினார்கள். ஆனால் நீதிபதிகள் போலி வாகனம் குறித்தும், போலீசை பார்த்து தப்பி சென்றது குறித்தும் நாம் கேள்வி எழுப்பிய பிறகே விசாரிக்க சொன்னார். விசாரிக்காமலேயே நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கையை வழங்கியுள்ளது''. இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.