குட்கா வழக்கு.. டிஎஸ்பி மன்னர் மன்னன் உள்பட இருவருக்கு சம்மன்
சென்னை: குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் துறை ஆய்வாளர் சம்பத் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் போதை பொருட்களான குட்கா விற்பனையை ஜெயலலிதா அரசு தடை செய்தது. இதையடுத்து சென்னை மாதவரத்தில் ஒரு கிடங்கில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2016-ஆம் ஆண்டு பெட்டி பெட்டியாக குட்கா பொருட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் குட்கா தொடர்பாக சோதனை நடத்தினர். அப்போது தூத்துக்குடி சிப்காட் ஆய்வாளராக உள்ள சம்பத், மதுரை டிஎஸ்பியாக உள்ள மன்னர் மன்னன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பத் மற்றும் மன்னர் மன்னனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத் தூத்கதுக்குடி சிப்காட் ஆய்வாளராக உள்ளார்.
அதுபோல் டிஎஸ்பி மன்னர் மன்னன், புழல் காவல் உதவி ஆணையராக இருந்து தற்போது மதுரை ரயில்வே டிஎஸ்பியாக உள்ளார். குட்கா பொருட்களை மாதவரத்தில் உள்ள கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்ட போது புழல் காவல் உதவி ஆணையராக இருந்தவர் மன்னர் மன்னன்.
சம்பத் செங்குன்றம் ஆய்வாளராக பணியாற்றிய போதுதான் குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இவர்களுக்கு தெரியாமல் குட்கா கிடங்கு 2 ஆண்டுகள் செயல்பட்டது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பவே இவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் சிபிஐ முன் ஆஜராக வாய்ப்புள்ளது.