தமிழகத்தில் இன்று முதல் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பொதுத்தேர்வுகள் துவக்கம்- ஏப்ரல் 22 வரை நடைபெறும்!
சென்னை: தமிழகத்தில் சி.பி.எஸ்.இ முறையிலான பாடத்திட்ட பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் துவங்கி நடைபெற உள்ளன.
பிளஸ் 2 தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 22 வரை நடக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு இன்று துவங்கி மார்ச் 28 இல் முடிகிறது. நாடு முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 25.67 லட்சம் பேர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.
பிளஸ் 2வில் 10.67 லட்சம் பேரும், 10 ஆம் வகுப்பில் 15 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, அந்தமான் தீவு உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 2,150 பள்ளிகளைச் சேர்ந்த 1.62 லட்சம் பேர் 10 ஆம் வகுப்பு தேர்வையும், 57 ஆயிரம் பேர் பிளஸ் 2 தேர்வையும் எழுத உள்ளனர்.
பிளஸ் 2வுக்கு முதல் நாளில் ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நாளில் "டைனமிக் ரீடெய்ல்" மற்றும் இந்திய சுற்றுலா, பாதுகாப்பு, ஐ.டி, உள்ளிட்ட 10 விருப்பப் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடத் தேர்வுகள் நாளை முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.