கிருஷ்ணசாமி மரணம்- நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த கூடாது: ரவீந்திரநாத்
நீட் தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து சிபிஎஸ்இ நீக்கப்பட வேண்டும் என்று ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி கேரளாவில் மாரடைப்பால் இறந்ததற்கு மத்திய அரசே காரணம் என்றும், நீட் தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து சிபிஎஸ்இ நீக்கப்படவேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு எழுதுவதற்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் கேரள மாநிலம் எர்ணாக்குளத்திற்கு சென்றுள்ளார்.
வேறு மாநிலத்தில் நீட் தேர்வு மையத்தைப் போட்டதால், மன உளைச்சலினாலும்,அலைச்சலினால் ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்பாலும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மத்திய - மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டதும்,தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் சி.பி.எஸ்.ஈ தமிழகத்தில் போதிய நீட் தேர்வு மையங்களை ஒதுக்காத துமே இம்மரணத்திற்குக் காரணம்.
இம்மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை நடத்தும் பொறுப்பில் இருந்து சி.பி.எஸ்.ஈ ஐ நீக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு உடனடியாக விலக்கு வழங்க வேண்டும்.
மரணமடைந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை மத்திய - மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். கிருஷ்ணசாமி அவர்களுக்கு இறுதி வணக்கங்கள்.அவரது மகனிற்கும் ,குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.