ஐ.ஐ.டி, என்.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் "உதான்" பயிற்சித் திட்டத்தில் குளறுபடிகள்!
நாட்டின் அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவியர் அதிக எண்ணிக்கையில் சேரும் வகையில் மத்திய அரசு "உதான்" (UDAAN) என்ற நுழைவுத் தேர்வு பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ 6 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 11,12ஆம் வகுப்பு படிக்கும் 1000 மாணவியருக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
இதில் 50% மாணவியர், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவியராக இருப்பர். இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை படிப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவும் சில நேரடி பயிற்சி வகுப்புகள் வழியாகவும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு 100% கல்வி நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும்.
இப்பயிற்சி திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றுதான் கடைசிநாள். ஆனால் இப்பயிற்சி திட்டம் குறித்து முறையான விளம்பரப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் தமிழகத்தில் மதுரை, கோயம்புத்தூரில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மத்திய பிரதேசத்திலும் மகாராஷ்டிராவிலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் இந்த திட்டமே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மட்டுமேதானா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அனைத்து பாடத்திட்ட மாணவர்களுக்குமான திட்டம் என்று மத்திய அரசு அறிவித்த போதும் போதுமான கால அவகாசம் தராமல் அவசரம் அவசரமாக இத்திட்டத்தை ஏன் செயல்படுத்த முயற்சிப்பது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இத்திட்டத்தில் இருக்கும் குளறுபடிகளைக் களைந்துவிட்ட பின்னரே நுழைவுத் தேர்வு பயிற்சி திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்,