கோவை ரகு இறந்தது அதிமுக பேனரால் அல்ல... முதல்வர் எடப்பாடியார் விளக்கம்
கோவையில் வைக்கப்பட்ட அதிமுக அலங்கார வளைவால் இளைஞர் ரகு இறக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை : கோவையை சேர்ந்த ரகு லாரி மோதியதால்தான் இறந்தார் என்றும் அதிமுக பேனரால் விபத்து ஏற்பட்டு இறக்கவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவையில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவினாசி சாலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே பேனர்கள் வைப்பது, அலங்கார வளைவு அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடங்கின.
கடந்த 24-ஆம் தேதி கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ரகு அவ்வழியாக பைக்கில் சென்றார். அப்போது அலங்கார வளைவில் இருந்து நீட்டிக்கொண்டிருந்த மூங்கில் மீது மோதிய ரகு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ரகுவின் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் அவர் திருமணத்திற்கு பெண் பார்க்க சொந்த ஊருக்கு வந்த போது இந்த கோர சம்பவம் நடந்தது.
பெரிய பெரிய பேனர்கள் வைப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தும் ஆளும் கட்சியினரின் இச்செயலால் உயிரிழப்பு நடந்ததற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இன்று கோவையில் நடைபெற்று வரும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், கோவையில் உயிரிழந்த ரகு அதிமுக பேனர் மீது மோதியதால் இறக்கவில்லை.
அவர் மீது லாரி மோதியதால்தான் உயிரிழந்துவிட்டார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.