பார்வையாளர்கள் விலங்குகளைத் தொந்தரவு செய்வதைத் தடுக்க.. கிண்டி சிறுவர் பூக்காவில் அதிரடி நடவடிக்கை!
கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் விலங்குகளை தொந்தரவு செய்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமிரா
Recommended Video
சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவுக்கு செல்லும் பார்வையாளர்கள் இனிமேல், பூங்காவில் இருக்கும் விலங்குகளை தொந்தரவு செய்தால் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பூங்காவில் கண்காணிப்பு கேமிரா நிறுவப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அருகே கிண்டி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் பல வகை பாம்புகள், ஆமைகள், மான்கள் என பல்வேறு வகை விலங்குகள் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் உற்சாக மிகுதியால் அங்குள்ள விலங்குகளை சீண்டி தொந்தரவு செய்கின்றனர். இதுபோன்ற செயல்கள் பூங்காவைப் பாராமரிக்கும் நிர்வாகத்தினர் கவனத்திற்கு வராமல் போவதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. அதனால், பார்வையாளர்களின் தொந்தரவுகளில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கிண்டி சிறுவர் பூங்காவில் சிசிடிவி கண்காணிப்புக் கேமிரா நிறுவப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா நிறுவப்பட்டது குறித்து பூங்கா பராமரிப்பு நிர்வாகத்தினர் கூறுகையில், " பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விலங்குகளைப் பாதுகாக்கவும் பூங்காவின் நுழைவாயில் உள்பட மொத்தம் 14 கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன." என்று தெரிவித்தனர்.
மேலும், விடுமுறை நாட்களில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரியான நேரங்களில் பார்வையாளர்களை கண்காணிப்பது என்பது மிகவும் கடினம் என்று பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
2.7 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிண்டி சிறுவர் பூங்காவில் பணியில் உள்ள பராமரிப்பு ஊழியர்களைக் கொண்டு விலங்குகளை பராமரிக்கவே வேலை சரியாக இருக்கும்போது, பார்வையாளர்களை கண்காணிப்பது என்பது கடினமாக இருக்கிறது. அதனால், இந்த கண்காணிப்புக் கேமிராக்கள் பார்வையாளர்களை கண்காணிக்க உதவும் என்று பராமரிப்பு ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பூங்காவில் குறிப்பாக எந்த இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுபட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த பராமாரிப்பு ஊழியர்கள், குரங்குகள் இருக்கும் இடத்தில் தான் பார்வையாளர்கள் அடிக்கடி தொந்தரவு செய்யும் சம்பவங்கள் நடைபெறும். இதனைத் தடுக்க அந்த இடத்தில் கேமிரா நிறுவப்பட்டுள்ளது. அதேபோல, சிறுவர்கள் விளையாடும் பகுதியில் கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் விளையாடும் உபகரணங்களை உடைத்துவிடுவது உண்டு. அதனால், இந்த இடத்திலும் கேமிரா நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இனி கிண்டி சிறுவர் பூங்காவுக்குச் செல்லும் பார்வையாளர்கள், சிறுவர்கள் அங்குள்ள விலங்குகளை தொந்தரவு செய்தால், கண்காணிப்பு கேமிராவில் பார்க்கும் பூங்கா ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். அதனால், பூங்காவுக்கு போனோமா விலங்குகளைப் பார்த்தோமா என்றிருக்க வேண்டும்.