ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?... 27 சிசிடிவிக்களை அகற்றியது யார்.. பி.எச். பாண்டியன்
மறைந்த ஜெயலலிதாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் எப்படி இருந்தார் என்பது பற்றிய சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் முன்னாள் சபாநாயகர் பி. எச் பாண்டியன் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இறக்கும் வரையிலான சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் பி.எச். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே மோசமான நிலையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் பி.எச். பாண்டியன், தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் கொண்டு செல்லப்படவில்லை என்ற பரபர கேள்வியையும் பி.எச். பாண்டியன் எழுப்பியுள்ளார்.
மரணத்தில் சந்தேகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தொடக்கத்தில் இருந்தே பேசி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இன்று செய்தியாளர்களை சந்தித்து மேலும் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
போயஸ் கார்டன் சிசிடிவி
ஜெயலலிதா, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டத்தில் இருந்து பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட வேண்டும் என்று பாண்டியன் வலியுறுத்தினார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிலேயே சிசிடிவி கேமரா இருக்கின்றன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும் என்று பாண்டியன் அவர் கோரியுள்ளார்.
அப்பல்லோ சிசிடிவி கேமரா
இதே போன்று அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட வேண்டும். ஜெயலலிதா எத்தனை மணிக்கு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த காட்சிகளை மருத்துவமனை வெளியிட அவர் கோரியுள்ளார்.
27 கேமராக்களை அகற்றியது யார்?
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கிருந்த 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த உத்தரவை பிறப்பித்த்து யார் என்றும் பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.