மதுரையில் இந்தியன் வங்கி கொள்ளை விவகாரம்: சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு
இந்தியன் வங்கியின் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video
மதுரை: இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பட்டப்பகலில் காசாளரின் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கி ஊழியரின் பணி ஓய்வுக்கான பாராட்டு விழா அன்றைய தினம் வங்கியின் மாடியில் நடைபெற்றதால், ஊழியர்கள் அதில் பங்கேற்க சென்றிருந்தனர். வங்கி காசாளரும் பணத்தை பெட்டியில் வைத்து பூட்டாமல், அப்படியே வைத்துவிட்டு வாழ்த்து செல்ல விழாவுக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதுகுறித்து வங்கியின் சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். வாடிக்கையாளர் போல் தொப்பி அணிந்து உட்கார்ந்திருக்கும் அந்த நபர், அனைவரும் விழாவுக்கு சென்றுவிட்ட நிலையில் பணத்தை கொள்ளையடிக்க சுற்றுமுற்றும் பார்க்கிறார். அங்கு யாரோ வருவதுபோல் இருக்கவும் மீண்டும் இயல்பாக இருப்பதைபோல் வந்து உட்கார்ந்துகொள்கிறார்.
மீண்டும் காசாளரின் இருக்கை பக்கம் உள்ளே இறங்கி, பணக்கட்டுகளை எடுத்து தன் பையில் திணிக்கிறார். மறுபடியும் ஏறி வந்து இரண்டு பணக்கட்டுகளை எடுத்து பையில் திணித்து வெளியேறுகிறார். இந்த காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார் அவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் ஒரு வங்கியில் அதுவும் சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பது தெரிந்தும் காசாளரின் இருக்கையிலேயே அத்துமீறி நுழைந்து பணம் திருடப்படும் காட்சி பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.