சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர்... அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் நசீம் ஜைதி தலைமையிலான குழு இன்று சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் மட்டுமின்றி, 100 சதவீத வாக்குப்பதிவோடு நடத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராய, தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர்.
காலையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும், மாலையில் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாளுடனும் என இரண்டு கட்டங்களாக இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று, திமுக, அதிமுக உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நசீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சித் தலைவர்களின் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும், ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் முன் வைத்தன.