சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்... சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் அடுத்த மாதம் சென்னை வருகை தர உள்ளார்.
தமிழக சட்டசபையின் பதவி காலம் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 22-ல் முடிவடைகிறது. இதனால் மே முதல் 2 வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இதனிடையே சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் ஆணையாளர் நஜிம் ஜைதி ஜனவரி மாதம் சென்னை வருகை தர உள்ளார். அவருடன் தேர்தல் ஆணையாளகள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா உள்ளிட்டோரும் தமிழகம் வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல், வாக்குப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் பின்னர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும்.