சட்டமன்ற தேர்தலில் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர் நஜீம்
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் வாக்காளர்களுக்கு மது, பணம் தருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் பதவி காலம் மே 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய சட்டசபை அமைக்கப்பட வேண்டும்.
இதேபோல் புதுவையில் ஜூன் 2, அஸ்ஸாமில் ஜூன் 5, மேற்கு வங்கத்தில் மே 29, கேரளாவில் மே 31- ந் தேதியுடன் சட்டசபைகளின் பதவி காலம் முடிவடைகிறது. ஆகையால் தமிழகத்துடன் இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளன.
நஜீம் ஜைதி வருகை
இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேற்று மாலை சென்னை வந்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் இணை ஆணையர், துணை ஆணையர்களும் வருகை தந்தனர்.
சென்னையில்..
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் தேர்தல் ஆணையாளர்கள் குழு புதுச்சேரி சென்றது.
புதுவையில்...
புதுச்சேரியில் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் நஜீம் ஜைதி குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதேபோல் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
பாரபட்சமில்லாமல்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நஜீம் ஜைதி கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடுநிலையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் நடுநிலையை நிலைநாட்ட அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மது, பணத்தை தடுப்போம்
தேர்தலின் போது மது, பணம் தருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மது தருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் இதனைத் தடுக்க வேண்டும்.
65% வாக்காளர்கள்
புதுவையில் தேர்தல் ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு மொத்த மக்கள் தொகையில் 65% வாக்களிக்க் தகுதியானவர்கள்.
பிப்.14-ல் சிறப்பு முகாம்
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். புதுவையில் வரும் 14-ந் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடைபெறும். 100% வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாருக்கு வாக்கு? அறிய வசதி
புதுவை உருளையான்பேட்டை, உழவர்கரை மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய 3 தொகுதிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கான வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படுகின்றன.
மே 31-க்குள் அனைத்து தேர்தல்களும்...
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில தேர்தல்களும் மே 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு நஜீம் ஜைதி தெரிவித்தார்.