வைரலான மாணவர்கள் - ஆசிரியர் பாசப்போராட்டம்.. பிரபலங்கள் நெகிழ்ச்சி!
திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பாசப்போராட்டம் குறித்து திரை பிரபலங்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பாசப்போராட்டம் குறித்து திரை பிரபலங்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். இவர் இந்த பள்ளியில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஆசிரியராக சேர்ந்த பின் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
கட்டிப்பிடித்து கதறல்
இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
தற்காலிக நிறுத்தம்
மாணவர்களை விட்டு பிரிய முடியாமல் ஆசிரியரும் கதறி அழுதார். இந்த சம்பவத்தை தமிழ் மட்டுமின்றி தேசிய ஆங்கில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
|
ஹிரித்திக் ரோஷன் மகிழ்ச்சி
இந்த செய்தியை நியூஸ் மினிட்டில் பார்த்த ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆசிரியர்கள் மாணவர்கள் இடையிலான இப்படி ஒரு அன்பை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.
|
குரு சிஷ்யாஸ்
இதேபோல் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் ஆசிரியர் - மாணவர்கள் பாசப்போராட்டத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து குரு சிஷ்யாஸ் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசிரியரால் பெருமை
ஆசிரியர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தமிழக ஆசிரியர் துறைக்கே பெருமை தேடி தந்துள்ளார்.