மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் இன்று கோலகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தெய்வீக திருமணத்தை தரிசனம் செய்தனர்.
மதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ஆம் நாளான செவ்வாய்கிழமையன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் மதுரையின் அரசியாக மீனாட்சி திகழ்ந்து வருகிறார்.
9ம் நாளான நேற்று அம்மன் எட்டுதிசைக்கு சென்று போரிடும் நிகழ்ச்சியாக திக்கு விஜயம் நடந்தது. இதற்காக மாலை 6 மணிக்கு இந்திர விமானத்தில் மீனாட்சி அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மாசி வீதிகளில் வந்தனர்.
கீழமாசிவீதி, வடக்குமாசிவீதி சந்திப்பில் நேருக்கு நேர்சந்தித்துக் கொள்வர். எட்டாவது திசையில் சிவபெருமானை சந்திக்கும் போது மீனாட்சியிடமிருந்து மூன்றில் ஒரு தனம் மறைகிறது. இதன் பின்னர் இருவருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
மீனாட்சி திருக்கல்யாணம்
10-ம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி யுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கிழக்கு கோபுர வாசல் அருகே உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியர்
இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற் காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர். பின்னர் கோயிலுக்குள் வலம் வந்த அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் ஒருவர் பின் ஒருவராக மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள அலங்கார மணமேடைக்கு வந்தனர்.
மாணிக்க மூக்குத்தி வைர கிரீடம்
அப்போது, மணப் பெண் மீனாட்சி முத்துக்கொண்டை போட்டு வைரக்கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்கக்காசு மாலை, ஒட்டி யாணம் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார். பின்னர் மந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது. அதையடுத்து ஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெற்ற பின் அம்மனும், சுவாமியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
வைரக்கல் திருமாங்கல்யம்
பல்வேறு பூஜைகளுக்கு பின் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ் வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டினர். நிறைவாக மங்களவாத்தியம் முழங்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
புதுத்தாலி மாற்றிய பெண்கள்
திருமணம் முடிந்தவுடன் கூடியிருந்த பெண்கள் தாலியில் சந்தனம், குங்குமம் வைத்தும், நெற்றியில் பொட்டும் வைத்துக் கொண்டனர். சில பெண்கள் மீனாட்சிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட நேரத்தில் தாங்களும் புதுத்தாலி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கானோர் மதுரையில் திரண்டிருந்தனர்.
பிரம்மாண்ட அன்னதானம்
திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின் கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தையொட்டி மதுரையில் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை தேரோட்டம்
ஆவணி மூலவீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.