எச்சரிக்கை.. மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டட இடிப்பு பகுதியில் செல்போனுக்கு தடை
மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் இடிக்கப்படுவதை முன்னிட்டு அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மவுலிவாக்கத்தில் நாளை 11 மாடிக் கட்டடம் இடிக்கப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடிக் கட்டடம் கடந்த 2014ம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டட இடிபாட்டில் சிக்கி 61 தொழிலாளர்கள் பலியானார்கள். 27 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.
இந்நிலையில், இடிபட்ட கட்டடத்தோடு, சேர்த்து கட்டப்பட்ட இன்னொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, நாளை இந்தக் கட்டடம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது.
11 மாடிக் கட்டடத்தை இடிப்பதற்கான முன்னேற்பாடுகளை சிஎம்டிஏ செய்து வருகிறது. இந்தக் கட்டடம் முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து உள்பக்கமாக விழும் வகையில் தகர்க்கப்பட உள்ளது. இதற்காக இரண்டு வாகனங்களில் வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெருமளவில் வெடிபொருட்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கட்டடத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிக்கப்பட உள்ள கட்டடத்தை காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் விஜயராஜ்குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.