நான் திருடல... என்று அலறிய 15 வயது சிறுவனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்
15 வயது சிறுவனை ஊர்மக்கள் அடித்து கொன்றிருக்கிறார்கள்.
Recommended Video
கரூர்: பெற்ற தாய், கூட பிறந்த சகோதரி முன்னாலேயே 15 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது,.
கரூரை அருகே உள்ளது அல்லிக்கவுண்டனூர் என்ற கிராமம். இங்கு வசிப்பவர் பழனிசாமி. பாலசுப்பிரமணி என்ற 15 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாலசுப்ரமணியத்துக்கு சின்ன வயது முதலே படிப்பே ஏறவில்லை. எவ்வளவோ சொல்லியும் பள்ளிக்கூடத்துக்கு போவதே கிடையாது. அதனால் 8-ம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
கை செலவுக்கு பணம்
வெறுமனே ஊர் சுற்றி வருவதுதான் இவரது வேலை. நண்பர்களுடன் வெட்டியாக ஊரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் அடிக்கடி திருட்டு வேலைகளில் இறங்கி உள்ளார். ஊருக்குள் யாரும் இல்லாத வீடுகள், ஏமாந்த ஆட்கள் என யாரிடமாவது எதையாவது ஆட்டைய போடுவதுதான் பாலசுப்பிரமணியம் வேலை. எல்லாமே அன்றைக்கு தேவைப்படும் செலவுக்கு கரெக்ட் செய்து கொள்வதாம்.
கோபத்தில் ஊர் மக்கள்
இவரது திருட்டை கையும் களவுமாக பார்த்து சிலர் பெற்றோரிடம் வந்து குறையாகவும், புகாராகவும் சொல்லிவிட்டு போனார்கள். ஆனால் பெற்றோர் எவ்வளவோ கண்டித்தும் பாலசுப்பிரமணியம் திருந்தவும் இல்லை, திருட்டை விடவும் இல்லை. இதனால் சிலர் இவர் மீது கோபத்திலும் பொருட்கள், பணம் இழந்த ஆத்திரத்திலும் இருந்துள்ளனர்.
தரதரவென இழுத்தனர்
இந்நிலையில் நேற்று அதே ஊரை சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டில் செல்போன் உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் எல்லோருமே இது பாலசுப்பிரமணியன் வேலையாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்படியே விட்டால் இது சரிபட்டு வராது என்று எண்ணி இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என பேசிக் கொண்டனர். பின்னர் சிலர் அங்கிருந்த உருட்டுக்கட்டைகளை எடுத்து கொண்டு பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு சென்று அவனை வெளியே தரதரவென இழுத்து வந்தார்கள். என்ன ஏதென்று புரியாமல் தாயும், சகோதரியும் பின்னாலேயே ஓடிவந்தனர்.
நான் திருடல...
பாலசுப்பிரமணியத்தை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கையிலிருந்த உருட்டுக் கட்டையால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். வலி பொறுக்க முடியாத சிறுவன், "நான் திருடல... நான் திருடல.." என்று அலறினான். இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணிய மயக்கமானார். இதனால் பதறி துடித்த, அவரது அம்மா தண்ணீர்கொடுக்க வந்தார். ஆனால் அந்த கும்பல் தண்ணீரைகூட குடிக்க விடவில்லை. கடைசியில் பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளியமணை போலீசார் 5 பேரை விசாரணைக்கு கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.
மரித்துவிட்டதா?
உண்மையிலேயே செல்போன் திருட்டை பாலசுப்பிரமணியம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 15 வயது சிறுவனை அடித்து கொல்லும் அளவிற்கு நம் மக்களுக்கு மனித நேயம் மரித்து போய்விட்டது, ஈவி இரக்கமே காணாமல் போய்விட்டதா? அதுவும் ஒரு செல்போனுக்காக. ஒருவர் தவறு செய்தால் போலீசில் புகார் அளித்துவிட்டு, பையனையும் ஒப்படைத்துவிட்டு போகவேண்டியதுதானே? சட்டத்தை தாங்களே கையில் எடுத்து கொண்டால் கொண்டால் கோர்ட்டும், போலீசும் எதற்காக?
மாநிலமே சுடுகாடாகிவிடும்
இப்படி தவறு செய்தவர்களை நாமே கொல்லலாம் என முடிவெடுத்துவிட்டால் இந்த மாநிலமே கொஞ்ச நாளில் சுடுகாடாக போய்விடும். ஒருவர் என்றில்லை, கும்பல் என்றில்லை, ஒரு ஊரே ஒன்று சேர்ந்து ஒருவரை கொன்றாலும் அது குற்றமே!! எல்லாருமே கொலைக்காரர்களே!!வெளிமாநில இளைஞர்களை மட்டுமே குறிவைத்து தாக்கி இருந்த நிலையில் இன்று நம் மக்களையே அடித்து கொல்லும் காட்டுமிராண்டித்தனம் எதிர்கால சமுதாயத்தை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ?