செல்போன்களுக்கு இணைய சேவை வழங்கினால் வாடிக்கையாளரின் முன் அனுமதி தேவை... "ட்ராய்" உத்தரவு
சென்னை : வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு இனி முன் அனுமதியுடன் இணையதள சேவை வழங்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். உதவி பொதுமேலாளர் ஜி.விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில், வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு அவர்களுக்கு தெரியாமலே தொலைதொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவையை வழங்குகின்றன.
இதற்காக இணையதள சேவைக்காக டேட்டா கார்டு மூலம் ரீசார்ஜ் செய்த தொகை முடிந்த உடன், செல்போனில் பேசுவதற்காக ரீசார்ஜ் செய்துவைத்திருக்கும் மெயின் அக்கவுண்டிலிருந்தும் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே பணத்தை எடுத்துக்கொள்கின்றன. இதுகுறித்து பல புகார்கள் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வருகின்றன.
எனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்று முதல் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவையை வழங்குவதற்கு முன்பாக வாடிக்கையாளர்களின் முன்அனுமதியை முதலில் பெற வேண்டும்.
இணையதள சேவை இருப்பதால் பில் கட்டணம் அதிகமாக வரும்பட்சத்தில், இணையதள சேவை தேவை இல்லை என்று விரும்புகிறவர்கள் ‘ஸ்டாப்' என்றும், தேவை உள்ளவர்கள் ‘ஸ்டார்ட்' என்றும் ‘1925' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். உதவி பொதுமேலாளர் கூறியுள்ளார்.